பிறப்பு

14

Shared

அவர்களது வீட்டில் பிள்ளைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதும் பழக்கம் கிடையாது. அவர் கல்லூரியில் படிக்கும்போது, பிறந்தநாள் கொண்டாட ஆசை வந்து தனது அம்மாவிடம் கேட்டபோது, உத்தேசமாக இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ஆவணி மாதக் கடைசியில் ஒரு புதன்கிழமை ஆறு மணிக்குப் பிறந்ததாகக் கூறினார்.

Introduction

இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில், வேடசந்தூர் வட்டத்தில், வேடசந்தூருக்கு வடக்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கும் கூவக்காபட்டி என்னும் குக்கிராமத்தில், முனியப்பன், சின்னக் கண்ணம்மாள் என்பாருக்குப் பன்னிரண்டாவது பிள்ளையாக, 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் (அனேகமாக), ஒரு புதன்கிழமை மாலை ஆறு மணிக்குப் பிறந்தார்.

 

அவருடைய கிராமத்தில் அதிகமாகப் போனால் ஐம்பது வீடுகள் இருக்கும். கிணற்றுப் பாசனம் கொண்ட நன்செய் நிலம் கொஞ்சமும் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியும் கொண்ட கிராமம். சுற்றிலும் எட்டுப் பட்டிக் கிராமங்கள் கூவக்காபட்டி ஜமீனுக்கு உட்பட்டது. அத்தனை கிராமத்து மக்களும் கூவக்காபட்டி ஜமீன்தாருக்குக் கட்டுப்பட்டவர்கள். அந்த ஊர் ஜமீன் வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசு என்று சொல்லக் கேள்வி. அவரது தந்தையார் ஜமீன்தாரின் நெருங்கிய நண்பர்.

 

அவர்களது குடும்பம் ’படித்த’ குடும்பம். அவரது பாட்டனார் திரு.சிவலிங்கம் இதிகாச புராணங்களைக் கரைத்துக் குடித்தவர். கவிதை இயற்றுவார். இரவு நேரங்களில் அவர்களது வீட்டில் மகாபாரதம், இராமாயணம், மதுரைவீரன் கதை போன்ற கதா காலட்சேபம் சதா காலமும் நடந்து கொண்டே இருக்குமாம். ஊரிலேயே அவரது தந்தையார்தான் அதிகம் படித்தவர். இரண்டாம் வகுப்புவரை படித்துள்ளதாகக் கூறுவார். அதற்குப் பள்ளிச் சான்றிதழ் ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் நன்கு எழுதப் படிக்கத் தெரியும். கிராமத்துப் போஸ்ட் மாஸ்டராகப் பணிபுரிந்தார். எட்டுப்பட்டி மக்களுக்கும் கடுதாசி வாசித்துக் காட்டிப் பதில் எழுதிப் போடுபவர் இவர்தான். வரும் கடிதங்களில் முகவரியில் உள்ள ஆங்கிலப் பெயர்களைக் கூட வாசித்துச் சரியான நபரிடம் தபாலைச் சேர்த்து விடுவார். எட்டுப்பட்டிக்கும் சேர்த்து ஒரேயொரு பலசரக்குக் கடை அவர்களுடையது. மக்களுக்குத் தேவையான நாட்டு மருந்துகளும் கிடைக்கும். அவரது அம்மாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆடு, மாடுகள், பத்து ஆட்களை வைத்துக் காட்டில் வேளாண்மையைக் கவனித்துக் கொண்ட ’பண்ணைக்காரச்சி’ அவர்கள்.

 

அவரது பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகள் பிறந்து சில நாட்கள், சில வாரங்கள், சில மாதங்களில் இறந்து போயின. கடைசியாக மூன்று பிள்ளைகளே மிஞ்சின. ஓர் அக்கா – தவமணி. அவரைவிட ஐந்து வயது மூத்தவர். ஓர் அண்ணா – தங்கவேல். அவரைவிட இரண்டு வயது மூத்தவர். எனது இரண்டாவது வயதில் அனைவரும் அவர் இறந்து போனதாக நினைத்திருக்க, ஆச்சரியமாகப் பிழைத்துக் கொண்டார்.

 

அவர்களது வீட்டில் பிள்ளைகள் பிறந்தவுடன் ஜாதகம் எழுதும் பழக்கம் கிடையாது. அவர் கல்லூரியில் படிக்கும்போது, பிறந்தநாள் கொண்டாட ஆசை வந்து தனது அம்மாவிடம் கேட்டபோது, உத்தேசமாக இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு ஆவணி மாதக் கடைசியில் ஒரு புதன்கிழமை ஆறு மணிக்குப் பிறந்ததாகக் கூறினார். அவராகவே ஒரு கணக்குப் போட்டு அவருடைய பிறந்த நாளை 12-09-1951 என வைத்துக் கொண்டார். ஆனால் அவருடைய பள்ளிச் சான்றிதழில் அவரது பிறந்த தேதி 06-06-1950. அவர் கூவக்காபட்டிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேரும்போது ஆசிரியர் அவரிடம் பிறந்த தேதி கேட்க, அவர் தெரியாது என்று சொன்னார். எதிரே தொங்கிய காலண்டரைப் பார்த்தார். 1960 ஜூன் 6. ‘ஐந்தாம் வகுப்பில் சேருகிறாய். ஆக பத்து வயது. இன்று தேதி 06-06-1960. ஆக, உன் பிறந்த தேதி 06-06-1950’ என்று சொல்லி, அவ்வாறே எழுதிக் கொண்டார். ஐந்தாம் வகுப்பில் சேரும்போது ஒன்பது வயதுதானே முடிந்திருக்கும்? அவரது கணக்குப்படி பார்த்தாலும் அவரது பிறந்த தேதியை 06-06-1951 என்றுதான் போட்டிருக்க வேண்டும். இதுதான் குத்துமதிப்பு என்பது. அந்தப் பள்ளியில் அவரோடு படித்த அனைவருமே ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் (!) என்பது குறிப்பிடத் தக்கது.

Related articles

Website created and maintained by Lenin and Jenny in the memory of their loving dad.